ரெடிமேட் கான்கிரீட் நல்லதா


வீட்டுக் கட்டுமானப் பொருட்களில் முக்கியமானவை சிமெண்ட், ஜல்லி, மண். இந்த மூன்றையும் தண்ணீரில் குழைத்து கான்கிரீட் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கலவைதான் சுவர்களாக, கூரையாக, ஒரு வீடாக ஆகிறது.


இந்தக் கலவை, கட்டுமானம் நடக்கும் இடத்தில்தான் பெரும்பாலும் தயாரிக்கப்படும். ஆனால், இப்போது கலவையை முன்பேதயாரித்து நேராகக் கட்டுமானப் பணி நடக்கும் இடத்துக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார்கள். இதை ரெடி மிக்ஸ்டு கான்கிரீட் என்கிறார்கள்.


சாந்துக் கலவை தயாரிக்கும் இடம் இல்லாத நெருக்கடியான ஓரிடத்தில் மனை வாங்கி வேலைக்கு ஆட்களே கிடைக்காத சூழலில் வீட்டுக் கட்டுமானத்துக்கு ரெடி மிக்ஸ்டு கான்கிரீட் சரியான மாற்று எனலாம். ஏனெனில், இது பயன்படுத்தத்தக்க நிலையில் நமக்குத் தயாராகக் கிடைக்கும். எவ்வளவு கான்கிரீட் தேவையோ அவ்வளவு கான்கிரீட்டை வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம்.


ஜல்லி, மணல், சிமெண்ட், நீர், வேதிப்பொருள்கள் ஆகியவை ஆர். எம். சி தயாரிக்க உதவுபவை. மணலைப் பொறுத்தவரை இயற்கையான ஆற்று மணலோ செயற்கை மணலோ பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட்டை இளகிய நிலையில் நீடித்திருக்கச்செய்யும்பொருட்டு வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. எவ்வளவு நேரம்கழித்து கான்கிரீட் இறுக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. 


சிமெண்ட்டுக்குப் பதிலாக உலைக் கசடையும், எரிசாம்பலையும் பயன்படுத்தும் போக்கும் புழக்கத்தில் உள்ளன.


ஆர்.எம்.சி தயாராகும் இடத்துக்கும் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்குமான இடைவெளி மிகக் குறைவாக இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், கான்கிரீட் தயாராகி இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டால் அதன் தரம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.


ரெடி மிக்ஸ்டு கான்கிரீட்யைப் பொறுத்தவரை பலவிதக் கலவை விகிதங்களில் இது கிடைக்கிறது. ஆகவே, தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளமுடியும். எந்த வேலைக்கு எந்தத் தரத்தில் கான்கிரீட் தேவையோ அதைப் பெற்றுக்கொண்டு பயன்படுத்தலாம். ஒரே மாதிரியான தரத்தைக் கொண்ட கான்கிரீட்டைத்தான் அனைத்துக் கட்டுமானத்துக்கும் பயன்படுத்த வேண்டும் என்னும் நிலையை ஆர்.எம்.சி. தவிர்த்துவிடுகிறது.


கான்கிரீட் இறுக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதனால் வேலைகள் முடிய அதிக நேரம் ஆகும். ஆனால், ரெடி மிக்ஸ்டு கான்கிரீட் விரைவில் இறுகிவிடக்கூடிய தன்மையில் கிடைக்கிறது. இதனால் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாகிறது. நேரத்தை மிச்சப்படுத்தும் ரெடி மிக்ஸ்டு கான்கிரீட்டின் விலை சாதாரண கான்கிரீட்டைவிட அதிகம் என்பது கலக்கம் தரத்தான் செய்யும். ஆனால், நேரத்தை மிச்சப்படுத்த விரும்பினால் அதற்குரிய விலையை நாம் தரத்தான் வேண்டியுள்ளது.


தரத்தைப் பொறுத்தவரை ரெடி மிக்ஸ்டு கான்கிரீட்டின் தரத்தை எளிதில் அறிந்துகொள்ளக் கருவிகளும் முறைகளும் உள்ளன என்கிறார்கள். எனவே நமக்குத் தேவையான தரத்தில் இதைப் பெற்றுக்கொள்ள முடியும். சாதாரணமாகக் கட்டுமானம் நடைபெறும் இடங்களில் கான்கிரீட்டைத் தயாரிக்கும் போது இடமும் அதிகம் வேண்டும். மேலும் இந்தப் பணியின் போது ஒலி மாசும, தூசும் உருவாகும். ஆனால் ஆர்.எம்.சி யில் இந்தப் பிரச்சினை இல்லை . ஆர்.எம்.சியைப் பயன்படுத்துவதில் நமக்குத் தயக்கம் ஏற்படுத்தும் முதல் அம்சம் இதன் விலை.


பாதகம்


அதிக விலைக்கு மட்டுமே ரெடி மிக்ஸ்டு கான்கிரீட் கிடைப்பதால் செலவு வழக்கத்தைவிட அதிகமாகும். மேலும் ஆர்.எம்.சியைக் கொண்டுவரும் போக்குவரத்துச் செலவும் இதில் கூடிவிடும். கட்டுமான இடத்திலேயே கான்கிரீட் தயாரிக்கும்போது அது பலருக்கு வேலை வாய்ப்பாகவும் அமையும். ஆனால், ஆர்.எம்.சி. இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்படுவதால் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைக் குறைத்துவிடும். ரெடி மிக்ஸ்டு கான்கிரீட் பயன்படுத்தும்போது கட்டிடத்தில் விரைவில் விரிசல்கள் விழுந்துவிடுகின்றன என்றும் சொல்லப்படுகிறது.

- சூர்யன்